தங்கத்துடன் போட்டியிடும் தக்காளியின் விலை, இனி ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை…

July 3, 2023 at 7:21 am
pc

தக்காளி விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்கப்பட்டது.

மேலும் ‘தக்காளியை பதுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து வெளிசந்தைகளிலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.68-க்கு விற்பனையானது. அதன்பின்னர், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60 ஆனது. தக்காளி விலை உடனடியாக இறங்குமுகத்தில் சென்றதால் மக்கள் ஆறுதல் அடைந்த வேளையில் மீண்டும் அதன் விலை ஏறுமுகத்தில் சென்று விட்டது.

தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையாகி ஏழை-எளிய, நடுத்தர குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இன்று ஆலோசனை கூட்டம் தக்காளி விலை வரும் நாட்களில் உயரும் பட்சத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அதனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கிடையே தக்காளி விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. எனவே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை எப்போது தொடங்கும், ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படும், ஒரு குடும்ப அட்டைதாரருக்கு எத்தனை கிலோ வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website