தன் கோரமுகத்தை ரஷ்யா மீண்டும் நிரூபித்துள்ளது: உக்ரைன் ஜனாதிபதி ஆவேசம்!
ரஷ்ய பயங்கரவாதிகள் தங்கள் அச்சுறுத்தலை மீண்டும் நிரூபித்துள்ளனர் என நீர்மின் நிலைய அணை அழிப்பினை குறிப்பிட்டு ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் ககோவ்கா அணையில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் தாக்கம் நகரின் பல்வேறு பகுதிகளை பாதித்தது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அணை உடைப்பு ரஷ்யாவின் நாசவேலை என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் ரஷ்யாவை கண்டித்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் கடுமையாக ரஷ்யாவை சாடியதுடன், சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அவரது கண்டன பதிவில், ‘ரஷ்ய பயங்கரவாதிகள் மீண்டும் வாழும் அனைவருக்கும் தாங்கள் அச்சுறுத்தல் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். அதுதான் வேண்டுமென்றே நிகழ்ந்த உக்ரைனில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றின் அழிவு.
ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் இந்த பகுதிகளில் குறைந்தது 100 ஆயிரம் மக்கள் வாழ்ந்தனர். குறைந்தது பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னும் இருக்கிறார்கள். சாதாரண குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
எங்கள் சேவைகள், மக்களுக்கு உதவக்கூடிய அனைவரும் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர். ஆனால் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் மட்டுமே நாங்கள் உதவ முடியும். ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில், ஆக்கிரமிப்பளார்கள் மக்களுக்கு உதவ முயற்சிக்கவில்லை’ என கூறியுள்ளார்.
அத்துடன், ரஷ்யா யாருடைய நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டதோ அந்த மக்களை ரஷ்யா எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதையும் ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் ரஷ்யா என்ன கொண்டு வருகிறது என்பதையும் இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது என தெரிவித்துள்ளார்.