தமிழகத்தில் அதிகரிக்கும் திருமண மோசடிகள்

December 12, 2022 at 9:52 am
pc

தமிழகத்தில் திருமண மோசடிகள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. பலரை திருமணம் செய்து கொண்டு ஒரு புறம் ஆணும், மற்றொரு புறம் பெண்ணும் ஏமாற்றி கைதாகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடந்துள்ள திருமண மோசடி குற்ற சம்பவங்கள் சிலவற்றை பார்க்க உள்ளோம்.

கடந்த 2019ம் ஆண்டு திருமண தகவல் இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னனான சக்ரவர்த்தியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழ் மேட்ரிமோனி என்ற திருமண தகவல் மையத்தில் அஜய், விஜய், சக்கரவர்த்தி, விஜயகுமார், கிரிஜா, சரவணன் போன்ற பல்வேறு பெயர்களில் பதிவு செய்து சக்கரவர்த்தி பல பெண்களை ஏமாற்றி உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேட்ரிமோனியல் மூலம் 2வது திருமணம் செய்ய விரும்பும் பெண்களை மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு வெளிநாட்டில் டாக்டர், என்ஜினியர் என்று வேறு ஒருவரின் புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்து நைஜீரியாவைச் சேர்ந்த 2 பேரை ((பாலினஸ் சிகேலுவோ, சிலிட்டஸ் இகேசுக்வு)) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் 32 பெண்களை ஏமாற்றி ரூபாய் 1.50 கோடி பணம் மோசடி செய்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு கைதானார்கள்.

2021 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் அருகே மணப்பெண்ணாக நடித்து விவசாயியிடம் நகை, பணம் மோசடி செய்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர். ராஜேந்திரன் என்பவரை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளை திருடி சென்ற ரீசா, புரோக்கர்கள் அம்பிகா, வள்ளியம்மாள், ரீசாவின் உறவினர் தேவி, தங்கம் ஆகியோர் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தது பரபரப்பாக பேசப்பட்டது.

2022ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் விவாகரத்து ஆன பெண்களை குறி வைத்து திருமண மோசடியை அரங்கேற்றிய அரவிந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். விவாகரத்தான பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக கூறி பணம், நகைகளை மோசடி செய்து திருடி சென்று வந்த அரவிந்த்தை காவல்துறையினர் கைது செய்தனர். 4 பெண்களை ஏமாற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நகை, பணம் மற்றும் சொத்துக்காக விவாகரத்தான ஆண்களை கல்யாண புரோக்கர் மூலம் குறிவைத்து முதல் திருமணத்தை மறைத்து 2 திருமணங்களை செய்து மோசடியில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 54 வயதான சுகுணாவை ஆவடி மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் புழல் சிறையில் அடைத்தனர். பியூட்டி போல மேக்கப் போட்டு கொண்டு பாட்டியான சுகுணா ஏமாற்றியது காவல்துறையினர் விசாரணையில் தகவல்கள் வெளியானது. கடந்த ஜூலை மாதம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தாண்டு செப்டம்பர் மாதம் ஈரோட்டில் நான்கு பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட சரிதா என்பவர் காவல்துறையிடம் வசமாக சிக்கி சிறைக்குள் சென்றுள்ளார். கோபிசெட்டிபாளையம் போலீசார் புரோக்கர் உள்பட 4 கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பர் மாதம் நாமக்கல் பகுதியில் 7 பேரை திருமணம் செய்து மோசடி செய்ததாக மதுரையைச் சேர்ந்த சந்தியா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமண மோசடிகளில் சிக்கி ஏமாந்தவர்கள் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த மாதம் டிசம்பர் 3ம் தேதி சென்னை தாம்பரத்தில் 4 பேரை திருமண செய்து மோசடியில் ஈடுபட்ட அபிநயா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். தாம்பரத்தில் இளைஞரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓடிய பெண், இதே பாணியில் 4 பேரிடம் திருமணம் செய்து ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணத்திலேயே பல மோடிசகள் நடப்பதாக சொல்கின்றனர் காவல்துறையினர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website