தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 15, 16, 17-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேலும், 13, 15, 16, 17 ஆகிய தேதிகளில் லட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதி, கேரளா – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பிட்ட தேதிகளில் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.