தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு …
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 22ஆம் தேதி 8.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேருக்கு, மேற்கு – வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு – தென்கிழக்கு திசையில் 1460 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 23ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்கும்.
இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் (23-10-2022) ஞாயிற்றுக்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சம் 32 – 33 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கை
அக்டோபர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மத்தியமேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடுங்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைக்கிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.