தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் எடுத்து கொண்ட உறுதிமொழி..!

February 20, 2024 at 7:10 pm
pc

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதை ஆகிய மூன்று முக்கிய கடமையை பின்பற்றி, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

தளபதி விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இன்று இந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த உறுதிமொழி குறித்த விவரங்கள் பின்வருமாறு:

நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ்மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website