தமிழ் சினிமாவை ஆண்ட 3 இயக்குனர்கள்!
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றோர் போலவே மூவேந்தர்களாக 3 இயக்குனர்கள் கோலிவுட்டை ஆட்டி படைத்திருக்கின்றனர். இந்த சினிமா உலகை ஆட்சி செய்யும் சீனியர் ஹீரோக்கள் அனைவரும் இவர்களின் உருவாக்கமே. 50 சதவீத நடிகர்களுக்கு நடிப்பை கற்றுக் கொடுத்து நடிக்க வைத்தது இவர்கள்தான்.
கோலிவுட்டில் சுமார் 30 வருடங்களாக தனது சொந்த தயாரிப்பில் நிறைய படங்களை தயாரித்து இயக்கியவர்கள் ஸ்ரீதர். இவர் இயக்கிய முதல் படமான கல்யாண பரிசு என்ற படத்தில் சரோஜா தேவிக்கு கதாநாயகி என்ற அந்தஸ்தை வழங்கியார். அவரை மட்டுமல்ல எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ரஜினி போன்றோரின் படங்களை இயக்கி தயாரித்து பல நாயகன்களையும் வளர்த்து விட்டிருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து கோலிவுட்டின் உச்ச நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் கமல், ரஜினியை அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய இயக்குனர் தான் கே பாலச்சந்தர். இவர்களுக்கு முன்பு நீர்க்குமிழி என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ் செய்யும் ஹீரோவாக நடிக்க வைத்தார்.
இதோடு நின்றுவிடாமல் ‘அவள் ஒரு தொடர்கதை’ போன்ற சில திரைப்படங்களில் முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து இயக்கியிருந்தார். இந்த படங்களின் மூலம் படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய் கணேஷ், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றவையும் அறிமுகம் செய்தார். அது மட்டுமல்ல பிற மொழிகளில் இருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
அந்த வகையில் சுஜாதாவை அவள் ஒரு தொடர்கதை என்ற படத்திலும், சோபா மற்றும் சரத் பாபுவை நிழல் நிஜமாகிறது என்ற படத்திலும், சரிதாவை தப்புத்தாளங்கள் என்ற படத்திலும், பிரகாஷ் ராஜை டூயட் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இவர்கள் மட்டுமல்ல எஸ் வி சேகர், மகேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், எம் ஆர் ராதாவின் மகன் ராதாரவி போன்றவையும் அறிமுகப்படுத்தியது பாலச்சந்தரே.
இவரைத் தொடர்ந்து வந்த பாரதிராஜா கொஞ்சம் வித்தியாசமாக பல நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். அதிலும் இவர் அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கு இவரே ரகர வரிசையில் பெயரும் வைப்பாராம். ராதிகா, ராதா, ரேகா, ரேவதி, ரஞ்சிதா போன்ற நடிகைகளை எல்லாம் இவர்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறு தமிழ் சினிமாவில் இந்த மூன்று இயக்குனர்களும் சுமார் 50 நடிகர் நடிகைகளை சினிமாவில் உச்சத்திற்கு தூக்கி விட்டு அழகு பார்த்திருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.