தம்பதியை கட்டி போட்டு நகை,பணம் கொள்ளை…!!

June 13, 2022 at 5:50 pm
pc

திருப்பூர் அவிநாசி ரோடு, ராயப்பண்டார வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன், 60. இவரது மனைவி ராஜலட்சுமி. தம்பதிக்கு, சுசித்ரா, ஷிவானி என்று, இரு மகள் உள்ளனர். ஒருவர் அமெரிக்காவில் உள்ளார். மற்றொருவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலையில் உள்ளார். 

இவர் தனது மனைவி, மகள் உடன், இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார். தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில், 11 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.இந்நிலையில் கணவன், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள் இருந்த போது முகமூடி கொள்ளையர்கள், நான்கு பேர் நுழைந்தனர். 

ராஜலட்சுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகையை கேட்டனர். தொடர்ந்து, மகளை ஒரு அறையில் அடைத்தனர். தம்பதியை சேரில் கட்டி வைத்து விட்டு, 50 லட்சம் ரூபாய், 40 சவரன் நகையை கொள்ளை அடித்து தப்பி சென்றதாக சங்கமேஸ்வரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதுகுறித்து தகவலின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் வீட்டுக்கு சென்றனர்.

போலீஸ் கமிஷனர் பாபு, துணை கமிஷனர் அபினவ்குமார், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. வீட்டில் இருந்த நபர்களிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

பைனான்ஸ் தொழில் செய்வதால், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கொள்ளை நடந்ததா அல்லது குடும்பத்தினரை நோட்டமிட்டு இதை செய்தார்களா என, பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில், குடும்பத்தினர் மழுப்பலாக பதில் கூறி வருவதால், முழுமையான விசாரணைக்கு பின், உண்மை தெரிய வரும். அப்பகுதியில் உள்ள ‘சிசிடிவி’ கேமராக்கள் அனைத்தையும் தனிப்படை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website