தாயும் மகனும் சேர்ந்து புதுப்பெண்ணை அடித்து கொலை..!

September 20, 2023 at 10:45 pm
pc

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி 

கர்நாடகாவின் சிவமொக்கா, சாரதா நகரைச் சேர்ந்தவர் நமீதா (22). இவரும் ஹரிகே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (28) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

இருவரது பெற்றோர்கள் சம்மதத்துடனும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நமீதாவிடம் வரதட்சணை கேட்டு சதீஷும், அவரது தாயார் கிரிஜம்மாவும் தொல்லை கொடுத்துள்ளனர். 

இதனால் விரக்தியடைந்த நமீதா விநாயகர் சதுர்த்திக்கு தனது வீட்டிற்கு சென்றபோது நடந்தவற்றை கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இதனையடுத்து சதீஷ் தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து நமீதா வீட்டில் மயங்கி விழுந்ததாகவும், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

கணவர், மாமியார் கைது 

பதறிப்போன நமீதாவின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு நமீதா இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பொலிஸில் புகார் அளித்துள்ளனர். 

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பொலிஸார், சதீஷ் தனது மனைவியை அடித்துக் கொன்றுள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

உடனடியாக சதீஷையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் கிரிஜம்மாவையும் கைது செய்தனர்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website