தாளித்த கோதுமை இட்லி சாப்டான ,ருசியான இப்படி செஞ்சு பாருங்க…!!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு
இஞ்சி துருவல் – அரை ஸ்பூன்
நறுக்கிய கருவேப்பிலை – ஒரு கொத்து
துருவிய கேரட் – கால் கப்
நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கெட்டியான தயிர் – அரை கப்
சோடா உப்பு – கால் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு.
ய்முறை விளக்கம்: முதலில் ஒரு பேன் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து இரண்டு கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து குறைந்த தீயில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதிகம் வறுபடக்கூடாது, வாசம் வந்தால் போதும். இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆறிய கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே பேனில் தேவையான அளவிற்கு சமையல் எண்ணெய் சேர்த்து காய விடுங்கள்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் உளுந்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். லேசாக வறுபட்டதும், கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். பருப்பு வகைகளை சேர்த்த பின்பு தான் கடுகு சேர்க்க வேண்டும். இவை பொன்னிறமாக வறுபடும் பொழுது ரெண்டு பச்சை மிளகாய்களை சுத்தம் செய்து காம்பு நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். சுவைக்கு அரை ஸ்பூன் அளவிற்கு வருமாறு இஞ்சியை தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது பொடி பொடியாகவும் நறுக்கி சேர்க்கலாம்.
பின்னர் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடிப்பொடியாக நறுக்கி சேருங்கள். கருவேப்பிலையின் வாசம் கோதுமை மாவு இட்லிக்கு ரொம்பவே சூப்பராக இருக்கும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு விருப்பமான காய்கறியை சேர்க்கலாம். இதில் நாம் கால் கப் அளவிற்கு துருவிய கேரட்டை சேர்த்து வதக்க போகிறோம். ஒரு ரெண்டு நிமிடம் கேரட்டையும் நன்கு இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து ஆற வைத்து விடுங்கள். ஆறிய கோதுமை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். ரொம்பவும் தண்ணீர் சேர்க்கக்கூடாது, பிறகு இட்லி வராது.
கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு வந்ததும், தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகம் புளிப்பு இல்லாத கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் தாளித்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இட்லி மாவு சாஃப்ட்டாக வருவதற்கு கால் ஸ்பூன் அளவுக்கு சோடா உப்பு சேர்க்கலாம். விருப்பமில்லாதவர்கள் இதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். நன்கு இட்லி மாவை கரைத்த பிறகு இட்லி தட்டில் கொஞ்சம் போல் எண்ணெயை தடவி ஊற்றி அவித்து எடுத்தால் அவ்வளவு டேஸ்டியான, சூப்பரான கோதுமை இட்லி தயார்! இதை தேங்காய் சட்னி மற்றும் காரச் சட்னிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.