தினமும் அரைமணி நேரம் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள் ….அவ்வப்போது செய்யும் தவறுகள் …..!!
உடல் நலத்தை பேணி காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. ஏனெனில், நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். நம் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும். தினமும், நல்ல சத்துள்ள உணவு பொருட்களை சாப்பிடுவது மட்டும் ஆரோக்கியத்தை அளித்து விடாது. தினமும் குறைந்தது அரை மணி நேரத்திற்காவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படி செய்வதால், உடலின் அனைத்து பகுதிகளும் வலுவடைந்து, கெட்ட கொழுப்புகள் சேராமல் உடலை நலமுடன் வைத்துக் கொள்ள முடியும். உடற்பயிற்சி என்று சொன்னதும் அனைவரும் ஜிம்மிற்கு தான் படை எடுப்பார்கள். ஆனால், ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை காட்டிலும், நாம் எந்த செலவும் இல்லாமல், எந்த கடின பயிற்சியும் இல்லாமல், இயற்கை முறையில் எளிதான ஒரு உடற்பயிற்சியை செய்யலாம். அது தான் ரன்னிங் உடற்பயிற்சி. இதை கார்டியோ உடற்பயிற்சி என்றும் சொல்லுவார்கள்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு மேல் ஓடினால் உடலில் உள்ள நல்ல கொழுப்பு அதிகரிப்பதாகவும், கெட்ட கொழுப்புகள் குறைவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், ஒரு முக்கிய விஷயம் ஓடினால் மட்டும் போதாது, அதற்காக சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதை தெரிந்துக் கொண்டு அதன்படி, முறையான உடற்பயிற்சி செய்வது மிகவும் நன்மைப் பயக்கும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்ல, இது நம் உடலில் பல நன்மைகளை செய்கிறது. இப்போது, தினந்தோறும் ரன்னிங் உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ரன்னிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
ரன்னிங் செய்வதன் மூலம் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக்கப்படும். இதனால், இரத்த அழுத்தம் குறைந்து, இதயம் நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு மட்டுமல்ல, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. இதனால், மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால்,மூளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும்.
மலச்சிக்கல், அஜீரண பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு என்றே சொல்லலாம். ஏனெனில், ஓடுதல் செரிமானத்தை அதிகப்படுத்தி பசி ஏற்பட தூண்டுகிறது. இதனால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நலமுடன் வாழலாம்.
ஓடுதல் பயிற்சியை பழகி, அதை தினமும் கடைப்பிடித்து வந்தால், உடலில் உள்ள தசைகள், எலும்புகள் வலுப்படும் மற்றும் மூட்டுவலி, எலும்புப்புரை போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது. அதோடு, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் உள்ள எலும்புகளின் பரப்பளவும் அதிகமாகும் உடலின் அதிகப்படியான எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், இது தான் சரியான பயிற்சி. ஏனெனில், தினமும் ஓடுவதால் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கும்.
பொதுவாக, ரன்னிங், ஜாகிங் இரண்டுமே கார்டியோ உடற்பயிற்சிகள் தான். ஜாகிங் செய்ய தொடங்கி அதை தினமும் கடைப்பிடித்து வந்தால் உடலில் காய்ச்சல், இருமல், அலர்ஜி போன்ற தொந்தரவுகள் வராது. அதுவே, ரன்னிங் செய்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்காதவாறு பாதுகாக்கும்.
இந்த காலத்தில் அனைவரும் அவஷ்த்தைபடும் ஒரு விஷயம் என்றால் மன அழுத்தம் தான். ஆனால், தினமும் ரன்னிங் பயிற்சி செய்துவந்தால், மன அழுத்தம், மன கவலைகள் எல்லாம் விலகி உடலில் புத்துணர்ச்சி பெருகும். இதனால், நிம்மதியுடன் வாழலாம்.
தூக்கம் வராமல் தவிப்பவரா? உங்களுக்கான உடனடி தீர்வு இதுதான். தினமும் காலை வேளையில் ஓடுதல் பயிற்சி செய்ய ஸ்டார்ட் பண்ணுங்க. இதனால், உடல் களைத்துவிடும் இரவில் நல்லா தூக்கம் வரும்.
ரன்னிங் பயிற்சியின் போது நாம் செய்யும் தவறுகள்:
- தீவிர வலியுடன் ஓடுவது
- உடலை நீட்சியடையச் செய்வது அல்லது குனிவது
- உடற்பயிற்சி ஷூக்களை பயன்படுத்தாமல், ஏதோ ஒரு ஷூவை அணிந்து கொள்வது.
- வார்ம் அப் செய்யாமல் நேரடியாக களத்தில் குதித்து ஓடத் துவங்குவது.
- வார்ம் அப் செய்யும் போது முதலில் குதிகாலை ஊன்றுதல்
- கைகளை அதிகமாக ஆட்டுவது
- எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் ஓடாமல், அதிக தூரம் ஓடுவது
- எடுத்தவுடன் வேகமாக ஓட தொடங்குவது.