தினமும் 21 மணி நேரம் நடிக்கிறார்.. 20 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் இது நடக்குது: அஜித் மேனேஜர்..!

நடிகர் அஜித் கடந்த பல ஆண்டுகளாக ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த திரைப்படத்தில் கமிட் ஆவார் என்றும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தால் குழப்பம் ஆகிவிடும் என்பதால் அதனை அவர் கவனத்துடன் கையாண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களுக்கு முன்பு அஜித் ஒரே நேரத்தில் இரண்டு மற்றும் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தான் அவர் ஒரே நேரத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத காரணங்களால் லைக்காவின் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து அஜித் தினமும் 21 மணி நேரம் நடித்துக் கொடுக்கிறார் என்றும் 20 வருஷத்துக்கு பிறகு தற்போது தான் அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் காலையில் கலந்து கொண்டு மாலை முடிவடைந்தவுடன் ’குட் பேட் அக்லி’படத்தின் படப்பிடிப்புக்கு செல்கிறார் என்றும் நள்ளிரவு 2 மணி வரை நடித்துவிட்டு அதன்பிறகு அவர் ஹோட்டல் சென்று ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள் காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு திரும்பி விடுகிறார் என்றும் இப்படி அவர் உழைக்க காரணம் குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கமிட்மெண்ட் தான் என்றும் சுரேஷ் சந்திரா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.