திருமணத்துக்கு மறுத்த காதலியை கொடூரமாக கொன்ற காதலன்!

December 12, 2022 at 10:19 am
pc

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா பகுதியிலுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் தபஸ்வி. இவர் விஜயவாடாவில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இவரது பெற்றோர் மும்பையில் இருப்பதால், விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தங்கி படித்து வந்தார். இப்படி இருக்கையில், இவருக்கும் கிருஷ்ணா பகுதியை சேர்ந்த ஞானேஸ்வர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இன்ஜினியர் மாணவரான இவர், சமூக வலைதளத்தில் தபஸ்விக்கு அறிமுகமாகியுள்ளார். இப்படி இருவரும் மாதக்கணக்கில் காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இதனால் தபஸ்வி, தனது காதலனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் விடாமல் துரத்திய காதலன், அவரை மீண்டும் மீண்டும் தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் வேறு வழியின்றி குண்டூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தனது தோழி வீட்டில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார் தபஸ்வி.

அப்போது காதலனால் தபஸ்வி அதிகமாக மன சங்கடத்தில் இருப்பதை அறிந்த தோழி, அவர்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைக்க எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று தனது வீட்டிற்கு தோழியின் காதலனான, ஞானேஸ்வரரை வர சொல்லியிருக்கிறார். இருவரும் ஒரு அறையில் பேசிக்கொண்டிருந்தனர்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, தனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றும், தான் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தனது காதலனிடம் தபஸ்வி கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த காதலன், கடுமையாக சண்டை போட்டுள்ளார். இருப்பினும் தபஸ்வி தான் எடுத்த முடிவில் நிலையாய் இருந்ததால், அவரை கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி தான் மறைத்து வைத்திருந்த அறுவை சிகிச்சை செய்யக்கூடிய பிளேடை கொண்டு அவரது உடல் முழுவதும் வெட்டியுள்ளார். இது மட்டும் போதாது என்று அவரது கழுத்தையும் கரகரவென அறுத்துள்ளார். இதில் அலறி துடித்த தபஸ்வியை காப்பாற்ற தோழி முற்பட்டபோது அது முடியாமல் போனது. பின்னர் இரத்த வெள்ளத்தில் தபஸ்வி மயங்கி விழுந்தார்.

இதைத்தொடர்ந்து தோழியோ அக்கம்பக்கத்தினரை அழைக்கவே, பயந்துபோன காதலன் தனது கையையும் அதே பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், ஞானேஸ்வரரை பிடித்து கட்டிப்போட்டு, தபஸ்வியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்

மருத்துவமனையில் தபஸ்வியை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குற்றவாளி ஞானேஸ்வரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு ஒருவரை திருமணம் செய்யப்போவதாக கூறிய காதலியை, காதலனே சரமாரியாக வெட்டி கொன்றுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website