துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்ற இந்திய மகளிர் அணி!
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில் வாலறிவன், ரமிதா, ஸ்ரேயா அகர்வால் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி அனா நீல்சன், எம்மா கோச், ரிக்கே மேங் இப்சன் ஆகியோரை கொண்ட டென்மார்க் அணியை 17-5 என்ற கணக்கில் தோற்கடித்து தங்க பதக்கம் வென்றது.
இந்தத் தொடரில் 12 பேரை கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. கடந்த 27-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் இந்தியா ஒரு தங்கத்துடன் பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. செர்பியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் முதலிடத்தில் உள்ளது.