நல்லி எலும்பு இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!
திருமண நிச்சயதார்த்தத்தின் போது நல்லி எலும்பு இல்லாதால் மணமகனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இந்திய மாநிலமான தெலங்கானா, நிஜாம்பாத் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், ஜக்தியால் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர், பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு மணமகளின் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அப்போது, நிச்சயதார்த்தத்தை ஆடம்பரமாகவும், பாரம்பரியமாகவும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால், மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் உறவினர்களுக்கு அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்தனர்.
எல்லாம் சமூகமாக நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென மணமகனின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்டிறைச்சியில் நல்லி எலும்பு இல்லை என பிரச்சனை எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, ஒருக்கட்டத்திற்கு மேல் கைகலப்பு ஆரம்பித்தது. இதனால், அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் சமாதானமாகவில்லை. பின்னர், திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் வீட்டார் அறிவித்து எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.