தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதோடு நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என அதன் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இன்று காலை தபால் நிலையங்கள் மூடப்பட்டு கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.இன்று தபால் நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக தபால் நிலையங்களுக்கு சேவைகளைப் பெறவந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதை காணமுடிந்தது.குறிப்பாக நீதிமன்ற கட்டணங்கள் கட்டுவோர், பரீட்சைக் கட்டணங்களை கட்டுவோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதை காணமுடிந்தது.நுவரெலியா தபாலகம் விற்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நவம்பர் 8, 9, 10 ஆகிய 3 நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது. எனினும் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறுகிறது.இதனிடையே தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று காலை இதற்காக உத்தரவில் கையொப்பமிட்டதாக தெரிவித்தார்.