நானே வருவேன் – பொன்னியின் செல்வன் மோதல்..சர்ச்சைக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர்..!

தனுஷ் நடிப்பில் செல்வராகவனின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் தான் நானே வருவேன். இவர்கள் கூட்டணி என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என இவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
எனவே புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மீண்டும் நானே வருவேன் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. ஆனால் செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியாகவுள்ளது.
இதன் காரணமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இரு பெரிய படங்கள் ஒரே சமயத்தில் வெளியானால் அது இரு படங்களின் வசூலுக்கு பாதிப்பை உண்டாக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் பொன்னியின் செல்வன் படத்தோடு நானே வருவேன் படம் எதற்காக வெளியாகின்றது, ஒரு வாரத்திற்கு பிறகு வெளியானால் தான் என்ன எனவும் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கெல்லாம் நானே வருவேன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, நாங்கள் பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டிபோட நினைக்கவில்லை. பண்டிகை நாட்களில் வரும் விடுமுறையை எண்ணியே நாங்கள் நானே வருவேன் படத்தை வெளியிடுகின்றோம்.
அடுத்த வாரம் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் அதை கருத்தில் கொண்டே நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்கின்றேன். இதே போல தான் அசுரன் படத்தையும் பண்டிகை நாட்களில் ரிலீஸ் செய்தேன்.
மேலும் இதற்கு முன் ஒரே நேரத்தில் வெளியான இரு படங்களும் வெற்றிபெற்றுள்ளன.
உதாரணத்திற்கு ஜில்லா – வீரம் போன்ற படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றிபெற்றன. அதைப்போல இவ்விரு படங்களும் வெற்றிபெறும் என்றார் தாணு.