“நான் இருக்கும்வரை உங்கள் மீது யாரும் கைவைக்க முடியாது” – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு!
தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆளும் திமுக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதில் அவர் தமிழக அரசுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்றும், எந்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தாலும் தமிழக அரசு குறை சொல்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் திமுகவும், காங்கிரசும் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றன. அவை இரண்டும் அகற்றப்பட வேண்டிய காட்சிகள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, ‘”தேர்தலுக்கு பின் தேடினாலும் திமுக கிடைக்காது. முற்றிலும் அகற்றப்பட வேண்டிய கட்சி திமுக. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டைக் கொள்ளை அடிப்பதற்காகத்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுத்து வருகின்றனர்.
நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது. இந்தியா 100 மடங்கு முன்னேறினால் தமிழ்நாடும் 100 மடங்கு முன்னேற வேண்டும். உங்கள் வரியைத்தான் நாங்கள் உங்களுக்கு திட்டங்களாக வழங்குகிறோம். மோடி இருக்கும்வரை யாரும் உங்கள் மீது கைவைக்க முடியாது.
சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். எனக்கு தமிழ்மொழி தெரியாது, ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்.
நான் பேசுவதை புரிந்துகொண்டு எனக்காக கூடியிருக்கும் மக்கள் என்னை வாழ்ந்த வேண்டும். பாஜக 400 இடங்களில் வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆசீர்வதிக்க வேண்டும். நெல்லை மக்களின் ஆசியோடு பிரதமர் பதவியில் மீண்டும் அமர்வேன்” என கூறினார்.