பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் கமல்ஹாசன்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறுபவர் நடிகர் கமல்ஹாசன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மழை குறித்து பேசியது
மிக்ஜாம் புயல் குறித்து ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
பின் செய்தியார்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மழை பெய்து முடிந்த பிறகு தான் என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து மோட்டாரை கேட்டோம் என தலைமைச் செயலாளர் கூறியிருந்தார். அப்படி என்றால் எந்த அளவுக்கு இந்த அரசு முன்னெச்சரிக்கை எடுத்துள்ளது என்று தெரிகிறது.
தமிழக அரசு அலட்சியமாக இல்லாமல் இருந்தால் சீக்கிரமாகவே மழைநீரை அகற்றியிருக்கலாம். ஆனால், இன்று தண்ணீர் தேங்காத இடமே இல்லை” என்று கூறியுள்ளார்.
கமல் குறித்து பேசியது
மேலும், அரசை குறை சொல்வதற்கான நேரமில்லை எனவும், களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் எனவும் நடிகர் கமல்ஹாசன் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “அவரை நான் அரசியல்வாதியாக கருதவில்லை. பச்சோந்தி கூட சில நேரம் கழித்து தான் நிறம் மாறும். ஆனால், இவர் விரைவாக நிறம் மாறக்கூடியவர். இவரது கட்சியில் இருந்து பல பேர் வெளியில் சென்றுவிட்டார்கள்” என்றார்.