பயிர் காப்பீடு திட்டம்-விவசாயிகளுக்கு ரூ.560 கோடி – வங்கிக்கே நேரடியா வந்துடும்.. குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..

September 21, 2023 at 10:43 pm
pc

புயல், வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் நெய்பயிர்கள் பாதிக்கப்படுவதும், வறட்சியின் காரணமாக மகசூல் அதிகமாக கிடைக்காத நெருக்கடியான சூழலிலும் விவசாயிகள் இருந்து வருகிறார்கள். இதனால், விவசாயிகள் நஷ்டமடையும் நேரத்தில் அதனை ஈடு செய்வதற்காக பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் பயிர்காப்பீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது

2022-2023 ஆம் ஆண்டில் இத்திட்டம் 37 மாவட்டங்கள் அடங்கிய 14 தொகுப்புகளில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோ–டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்.டி.எப்.சி எர்கோ மற்றும் ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிரில், 11.20 இலட்சம் விவசாயிகளால் 24.45 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த காப்பீட்டுக் கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,375 கோடியும் ஒன்றிய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.824 கோடியும் விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும் ஆக மொத்தம் ரூ.2,319 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அடையப்பட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தால் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மிதமான வறட்சியால் 3,52,797 ஏக்கர் பரப்பளவில் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.181.40 கோடி தொகையை தமிழ்நாடு அரசு 1,87,275 விவசாயிகளுக்கு 4.9.2023 அன்று வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், “இதனை தொடர்ந்து தற்போது பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில், வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சுமார் ஏழு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட மகசூல் இழப்பிற்கு, திட்ட விதிமுறைகளின் படி பாதிப்படைந்த பகுதிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 560 கோடி ரூபாய் சுமார் 6 இலட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த திடீர் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website