பள்ளி மாணவி மரணம் – குற்றங்கள் வெளிவருமா -வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 192 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறைனர் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு விசாரணை முறையாக சென்று கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர், சமூக வலைதளங்களில் வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.