பிரசவத்திற்கு செல்லும் வழியில் கர்ப்பிணிப் பெண், கணவன் தீயில் கருகிய பரிதாபம்
பிரசவ வலியில் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தபோது கார் தீப்பிடித்ததில் கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவனும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட அரசு மருத்துவமனை அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பிரசவ வலி
உயிரிழந்த கர்ப்பிணி பெண் குட்டியாட்டூரைச் சேர்ந்த ரீஷா (26) மற்றும் அவரது கணவன் பிரிஜித் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டதாகக் கூறிய ரீஷாவுடன் காரில் மருத்துவமனைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை முழுவதுமாக அணைத்து பிரிஜித் மற்றும் ரீஷாவை மீட்டனர், ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர்.
காரில் 6 பேர்
காரில் 6 பேர் பயணித்துள்ளனர், வாகனம் தீப்பிடித்ததில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை உட்பட நால்வர் தப்பினர். அவர்கள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
2020 மாடல் மாருதி எஸ்-பிரஸ்ஸோவின் முன்பக்கக் கதவைத் திறக்க முடியாததால், எரிந்த காரின் உள்ளே பாதிக்கப்பட்டவர்கள் சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது, என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் கர்ப்பமாக இருந்ததாகவும், காரின் முன்பக்க கதவை திறந்து தம்பதியை மீட்க முயன்றதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.