பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை விற்று மது குடித்த தாத்தா!

June 12, 2022 at 10:19 pm
pc

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கேசவமூர்த்தி படாவனே பகுதியை சேர்ந்தவர் பசவண்ணா(65). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி குடித்து வந்துள்ளார். 

இந்நிலையில் இவரது மகள் சுஜாதா பிரசவத்திற்காக தாவணகெரேவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 2 நாட்களில் சுஜாதாவும், அவரது குழந்தையும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு துணையாக பசவண்ணா இருந்தார். 

இந்நிலையில் குழந்தை திடீரென மாயமானது. இதுகுறித்து பசவண்ணாவிடம் கேட்டபோது அவர் குழந்தை இறந்து விட்டதாகவும், அதனால் குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டு மூடிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பசவண்ணா மகன் பிரசாந்த், தாவணகெரே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரின்பேரில் போலீசார் பசவண்ணாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது பசவண்ணா தன்னிடம் குடிப்பதற்கு பணம் இல்லாத காரணத்தால் நேற்று முன்தினம் தனது பேத்தியான பச்சிளம் குழந்தையை துமகூருவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.50 ஆயிரத்திற்கு விற்றது தெரியவந்தது. 

இதையடுத்து பசவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து குழந்தையை வாங்கிய தம்பதியையும் போலீசார் தேடி வருகின்றனர். மதுகுடிக்க பணம் இல்லாததால் பிறந்து 2 நாட்களேயான பேத்தியை தாத்தா விற்று மது வாங்கி குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website