பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்!

March 13, 2023 at 8:02 am
pc

2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் இம்மாதம் தொடங்குகிறது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 8¾ லட்சம் பேர் இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத இருக்கின்றனர். சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைகளில் போதிய மின்சார வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்து தரப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் இந்த பணிகளை உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 46 ஆயிரத்து 870 பேரும், மாணவர்கள் காப்பி அடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான படை உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 235 பேரும் பணியில் ஈடுபட உள்ளனர். புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புதாள்களுடன் முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். மாணவ-மாணவிகள் அதனை சரிபார்த்து கையொப்பமிட்டு, தேர்வை எழுத தொடங்கலாம் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. 

காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம்3-ந் தேதியுடன் நிறைவு முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது. 

தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது. தேர்வு முடிந்ததும், அடுத்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியில் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். திருத்தும் பணி நிறைவுபெற்று, மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற மே மாதம் 5-ந் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ள நிலையில், தேர்வில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் தண்டனை விவரங்களை அரசு தேர்வுத்துறை தெரிவித்திருக்கிறது. அதில் சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:- 

* தேர்வர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்கள், கையேடுகள், கையெழுத்து பிரதிகள், துண்டுச்சீட்டுகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அந்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறப்படும். மேலும் ஆட்சேபனைக்குரிய பொருட்கள் வைத்திருந்து பயன்படுத்தியிருந்தால், அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, அடுத்த ஓராண்டுக்கு தேர்வுகள் எழுதவும் தடை விதிக்கப்படும். 

* விடைத்தாளை பார்த்து தேர்வு எழுதியிருந்தாலோ, பிறரின் உதவிகளை தேர்வறைக்கு உள்ளேயோ, வெளியில் இருந்து பெற்றாலோ அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓராண்டு அல்லது அடுத்த 2 பருவத் தேர்வுகளுக்கும் அதிகமான பருவத்தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும். 

* ஆள்மாறாட்டம் செய்தால், இந்த பருவத் தேர்வு அனைத்தும் ரத்துசெய்யப்படுவதுடன், தேர்வு எழுத நிரந்தர தடைவிதிக்கப்படும். விடைத்தாளை பரிமாற்றம் செய்தால், சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பருவத்தேர்வுகள் எழுத தடைவிதிக்கப்படும். வினாத்தாளை வெளியில் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடைவிதிக்கப்படும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website