பெண்களுக்கு 35 வயதிற்கு மேல் தாக்கும் சதைக் கட்டி!

May 9, 2023 at 3:45 pm
pc

”இளம் பெண்களுக்கு, ‘பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்’ எனப்படும் நீர்க்கட்டிகளும், 35 வயதிற்கு மேல், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள் வருவதும், பல ஆண்டுகளாக பெண்கள் மத்தியில் பொதுவான பிரச்னையாக உள்ளது” என்கிறார் மகப்பேறு மருத்துவர்.

பைப்ராய்டு கட்டிகள் ஏற்பட காரணம் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். பைப்ராய்டு கட்டிகள், பெண்ணின் 30 முதல் 50 வயதிற்குள் வருகிறது. கட்டி என்றதும், அது கேன்சராக இருக்க கூடும் என்ற பயம் எல்லாருக்கும் ஏற்படும். 

ஆனால் பைப்ராய்டு கட்டிகள் பெரும்பாலும் கேன்சர் கட்டி கிடையாது. இது, கேன்சராக மாறுவதற்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகளே உள்ளன என்பதால் அது குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. முறையான சிகிச்சை முறையே உங்களுக்கு கைக்கொடுக்கும்.

பைப்ராய்டு கட்டி வருவதற்கு, மரபியல் காரணி தான் பொதுவாக கருதப்படுகிறது. இது தவிர, ‘ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்’ அதிகம் சுரப்பதாலும் இந்த கட்டி வரலாம். நீர்க் கட்டி அதிகம் இருந்தாலும், குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பவர்கள், ஹார்மோன் சிகிச்சை எடுப்பதாலும் இக்கட்டிகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். 

இன்றைய காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே பருவமடைந்து விடுகிறார்கள். இவர்களின் மாதவிடாய் சுழற்சி 10 வயதில் இருந்தே ஆரம்பிக்க துவங்கிவிடுகிறது. 

அவ்வாறு ஆரம்பிக்கும் நிலையில் அந்த பெண் குழந்தைகளுக்கு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் பைப்ராய்டு கட்டிகள் தோன்றும் வாய்ப்பும் அதிகம். இந்த கட்டிகள் உடலில் உருவானதற்காக எந்த அறிகுறியோ வயிற்றில் வலியோ இருக்காது.

நம் உடலுக்கும் மாற்றம் ஏற்பட்டு அதனால் எந்த அறிகுறி இல்லை என்றால், நாமும் அதை பெரியதாக கண்டு கொள்ள மாட்டோம். சில சமயம் வேறு ஏதாவது காரணத்திற்காக ‘ஸ்கேன்’ செய்து பார்க்கும் போது தான், இக்கட்டி இருப்பது தெரிய வரும். 

ஒரு சிலருக்கு மட்டும் மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படும். ரத்தப்போக்கும் அதிகமாகவும் அதே சமயம் அதிக நாட்களும் இருக்கும். இவர்கள் ரத்தசோகைபிரச்னையால் அவதிப்படுவார்கள். பைப்ராய்டு கட்டிகள் மூன்று இடங்களில் உருவாகும் வாய்ப்புள்ளது. 

ஒன்று, கர்ப்பப் பையின் வெளிப்புறம் வரலாம். கர்ப்பப் பைக்கும், வெளிப்புற அடுக்குக்கும் நடுவில் வரலாம். கர்ப்பப் பையின் உள்ளேயும் வரலாம். 

எங்கே இருக்கிறது, பிரச்னை என்ன, பெண்ணுடைய வயது இந்த மூன்றையும் பொறுத்து தான் சிகிச்சையும் மாறுபடும். அவரவர் பிரச்னைக்கு ஏற்ப தான் சிகிச்சை அளிக்க முடியும்.

மாதவிடாய் நின்ற பெண்ணுக்கு பைப்ராய்டு இருப்பது தெரிந்தால், கவலைப்பட அவசியம் இல்லை. அது கண்டிப்பாக கேன்சர் கட்டியாக மாறாது. இந்த சமயத்தில் இயல்பாகவே ஹார்மோன் அளவு குறைவதால், ரத்த ஓட்டம் குறைந்து, கட்டி சுருங்கி விடும். 

குழந்தை பெறும் வயதில், கர்ப்பப் பையின் உள்ளே கட்டி இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் அபாயமும், குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், கட்டியை அவசியமாக அகற்ற வேண்டும். 

கர்ப்பப் பையின் வெளிப்புறத்தில் இருந்தால், கர்ப்பம் தரிப்பதை பாதிக்காது. கர்ப்பப்பை வாயில் கட்டி இருந்தால், விந்தணு உள்ளே செல்வதை பாதிக்கும். கருக்குழாய் அருகில் இருந்தால், கரு முட்டையும், விந்தணுவும் இணைவதை பாதிக்கும்.

அதுவே கருப்பை உள்ளே இருந்தால், கரு தங்குவதை பாதிக்கும், கரு வளர்வதையும் தடுக்கும். இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், கட்டியும் பெரிதாக வளரும். இதனால் கர்ப்பகாலத்தில் பல வித சிக்கல்கள் ஏற்படலாம். 

கட்டியின் தன்மையைப் பொறுத்தே சிகிச்சையை தீர்மானிக்க வேண்டும். தற்போது எளிமையான, பல நவீன சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளதால், அவற்றை பயன்படுத்தலாம். 

சிலருக்கு கட்டியின் அளவு 5 செ.மீ.,க்கு மேல் பெரிதாக இருக்கும். அவர்களுக்கு வேறு வழியே இல்லாத பட்சத்தில், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக அமையும்.

மாதவிடாய் போது சிறிய வலி ஏற்பட்டாலும் தள்ளிப்போடாமல் உடனடியாக மகப்பேறு நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் மனதில் பதிய வைத்துக் கொள்வது அவசியம்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website