பெருமாளுக்கு மிகவும் விருப்பமான மாவிளக்கும் பானகமும் இப்படி செய்து பாருங்க… பெருமாளின் ஆசிர்வாதம் உங்களுக்கு தான் …!!
புரட்டாசி என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகை போட்டு நாம் வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த தளிகையில் பல விதமான வகைகள் உண்டு. சிலர் சாதம் சாம்பார் மற்றும் காய்கறிகளை சமைத்து வைத்து வணங்குவார்கள். ஒரு சில கலந்த சாதங்கள் ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வைத்து வணங்குவார்கள். சிலர் பழங்களை அதிக அளவில் வைத்து வணங்குவார்கள். இப்படி தளிகை அவரவரின் விருப்பத்திற்கு ஏற்றது போல் போடுவார்கள். இந்த தளிகையில் முக்கியமாக இரண்டு பொருட்களை நாம் அவருக்கு வைத்து வணங்க வேண்டும். அது மாவிளக்கும், பானகமும் தான். பெருமாளுக்கு உரிய இந்த மாவிளக்குகும், பானகமும் எப்படி செய்வது என்பதை குறித்த பதிவுதான் இது.
முதலில் மாவிளக்கு செய்ய பச்சை அரிசியை அலசி தண்ணீரில் ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து, பிறகு அதை வடித்து வீட்டின் நிழலிலே நன்றாக ஆற வைத்து ஈரம் இல்லாமல் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதை ஒரு மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு ஜலித்தெடுத்தால் ஓரளவிற்கு நைசான மாவாக கிடைத்துவிடும். இப்படி தான் மாவிளக்கு மாவை அரைக்க வேண்டும். கடைகளில் இருக்கும் பாக்கெட் மாவை வாங்கி இதற்கு உபயோகிக்க கூடாது.
இப்போது அரைத்து வைத்த மாவில் ஒரு கப் மாவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளங்கள். அதில் ஒன்றரை கப் அளவிற்கு வெல்லம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அரைத்த அரிசி மாவில் உள்ள ஈரமும், வெல்லமும் பிசைய பிசைய இரண்டும் சேர்ந்து நன்றாக இளகி வரும். இதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துக் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
இந்த வெல்லம் அரிசி இரண்டையும் கலந்த பிறகும் தண்ணீர் போதவில்லை என்றால் லேசாக பால் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்க வேண்டாம். பிசையும் போது கொஞ்சமாக கையில் நெய் தடவி கொள்ளுங்கள். இதை மாவை நன்றாக உருட்டி விளக்கு போலவே உங்கள் கைகளிலேயே பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் மாவிளக்கு தயாராகி விட்டது.
அடுத்ததாக பானகம். இதை செய்ய ஒரு கப் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மூன்று ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை, சுக்கு பவுடர் ஒரு சிட்டிகை மற்றும் ஒரு சிட்டிகைக்கும் குறைவான அளவு பச்சை கற்பூரம் இவை அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து விட்ட பிறகு, ஒரு ஐந்து துளசி இலையும் இதில் சேர்த்து வைத்து விடுங்கள். பெருமாளுக்கு பிடித்த பானகமும் தயாராகி விட்டது