பேருந்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றைய முந்தினம் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக குளிர்சாதன பேருந்து ஒன்று சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தது, முன்பதிவு ஏதும் இல்லாததால் வரும் பயணிகள் இடம் பிடித்து அமர்ந்தனர்.
அப்போது அங்கு வந்த உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் பணி புரியும் ஏஎஸ்ஐ முருகேசன், இருவர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை அங்கிருந்து எழுந்திருக்குமாறு கூறினார், அதற்கு அந்த பெண் முன்பதிவு இல்லாத பேருந்தில் ஏன் எழ வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஏஎஸ்ஐ தாம் அந்த இருக்கையில் இடம் பிடித்து வைத்திருப்பதாக கூறியதை அடுத்து அந்தப் பெண் அதுபோல் யாரும் இருக்கையில் இடம் பிடிக்கவில்லை என்று தெரிவித்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஏ.எஸ்.ஐ தனது பலத்தை காட்டும் விதமாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு ஜீப் உடன் வந்த காவலர்கள் அந்த பெண்ணை இருக்கையில் இருந்து எழச் செய்து ஜீப்பில் ஏற்றினார்.
இதனை செல்போனில் படம் எடுத்த கொண்டிருந்த இளைஞரிடம் சென்று அவரின் செல்போஃனை பறித்த ஏ.எஸ்.ஐ முருகேசன் அந்த இளைஞர், பேருந்தில் இடத்தை விட்டுக் கொடுக்க மறுத்த பெண், அவரது கணவர் ஆகிய மூவரையும் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் பாபுஜி அனைவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஏ.எஸ்.ஐ ஒருவர் தனது சொந்த விவகாரத்திர்காக பொது மக்களிடம் காட்டமாக பேசி, குற்றவாளி போல் அவர்களை ஜீப்பில் ஏற்றி சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.