போதையில் நண்பர்களுக்குள் தகராறு- அச்சத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
திருவாலங்காடு அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வழக்குப்பதியப்படுமோ என்ற அச்சத்தில் மற்றொரு நண்பர் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் சந்துரு (37). இவர் தனது நண்பரான தொழுதாவூரைச் சேர்ந்த ரஜினி 44 என்பவருடன் சின்னம்மாபேட்டை டாஸ்மாக் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சந்துரு, ரஜினியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரஜினி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்வர் என்ற அச்சத்தில் இருந்த சந்துரு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.