போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நிலம் அபகரிப்பு – போலீஸ் வலையில் சிக்கிய 4 பேர்
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பெண் வக்கீல் சுதா, நசீரா பாத்திமா ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில், சென்னை புது வண்ணாரப்பேட்டையில் எங்களுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்பிலான 1,310 சதுரடி நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சி.மகேஸ்வரி மேற்பார்வையில் துணை கமிஷனர் ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் உதவி கமிஷனர் அனந்தராமன் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞான சித்ரா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதில் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அமுதலட்சுமி (வயது 51), கத்திவாக்கத்தை சேர்ந்த கணேசன் (40), புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மன்சூர் அகமது (32), இர்பான் ஆகிய 4 பேர் போலி ஆவணங்கள் மூலம் இந்த நிலத்தை அபகரித்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அபகரித்த நிலம் மீட்கப்பட்டது.