ப்ரோக்கரை அட்டாக் செய்து 23 சவரன் நகை பறிப்பு…! போலி மாப்பிள்ளை வீட்டார் செய்த காரியம்
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் 75 வயதான கந்தசாமி. இவர் திருமணம் மற்றும் நிலம் சம்பந்தமான தரகர் தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் சொகுசுக் கார் ஒன்றில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இவரைத் தேடி பணகுடிக்கு வந்தது.
தங்கள் வீட்டில் உள்ள பையனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும் என்றும், இதற்காக குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்திற்கு சென்று பெண் வீட்டாரிடம் பேசி முடித்து தர வேண்டும் எனவும் கூறி கந்தசாமியை அழைத்துள்ளனர். தரகர் கந்தசாமி, கழுத்தில் தங்கச் சங்கிலி, விரலில் மோதிரம், கையில் பிரேஸ்லெட்
என்று மைனர் போல தகதகவென்று அவர்களுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று பெயரளவில் பெண்ணைப் பார்த்துள்ளனர். பின்னர் பெண் பிடிக்கவில்லை, வேறு சம்பந்தம் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டனர். ஊருக்கு திரும்பும் வழியில் தரகர் கந்தசாமிக்கு உணவு வாங்கிக் கொடுத்து அவரை பணகுடியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் அந்த கும்பல் கந்தசாமியை தொடர்புகொண்டு காவல்கிணறு பகுதியில் பெண் வீடு இருப்பதாகவும், அதை பார்த்து பேசி முடிக்கலாம் எனவும் கூறி அவரை அழைத்துள்ளனர்.
அவரை காரில் ஏற்றிய பெண் வீட்டார், சிறிது தூரம் சென்றதும் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றி தருமாறு மிரட்டியுள்ளனர். கந்தசாமி சத்தமிட்டதால் கத்தியால் சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த 23 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு ஆரல்வாய்மொழி அருகில் உள்ள கண்ணுபொத்தை பகுதியில் ஓடும் காரில் இருந்து முட்புதரில் அவரை தள்ளி விட்டு தப்பிச் சென்றனர்.
வெள்ளிக்கிழமை காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முட்புதரில் முதியவர் ஒருவர் கிடப்பதை பார்த்து
ஆரல்வாய்மொழி போலீசார் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர் பெண் வீட்டார் போல போலியாக நடித்து தரகரை தாக்கி நகை பறித்த கும்பலை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.