மகளின் காதலனை கொலை செய்து அவரின் சமாதிக்கு அருகிலேயே புதைத்த தந்தை.
மகளின் காதலனை கொலை செய்து அவரின் சமாதிக்கு அருகிலேயே புதைத்த தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா, ஏலூரூ மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவன் கல்யாண் (24). அவரும் ஜங்காரெட்டிகூடத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவரின் மகள் சியாமலாவும் (18) ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களுடைய காதல் பற்றி குடும்பத்தாரிடம் கூறினர். ஆனால் இரண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.
இதனால், கடந்த ஜூன் மாதம் காதலனை திருமணம் செய்ய முடியாத காரணத்தால் மனவேதனையில் இருந்த சியாமளா பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதில் தந்தை நாகேஸ்வரராவ் மகளின் மரணத்திற்கு பவன் கல்யாண்தான் காரணம் என்ற கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், பவன் கல்யாண் நண்பர்கள் அளித்த விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது பற்றி பவன் கல்யாண் பெற்றோர் முறைப்பாடு அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரித்ததில், பவன் கல்யாணை நாகேஸ்வர ராவ் அழைத்து சென்றது தெரிய வந்தது.
மேலும், விசாரணையில் நாகேஸ்வரராவை அழைத்து சென்று கை ,கால்களை கட்டி கடுமையாக தாக்கி கொலை செய்து அவருடைய உடலை சியாமளாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே புதைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
உடனே பொலிஸார் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பவன் கல்யாண் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.