மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் வெட்டி கொன்ற தந்தை!!

May 8, 2022 at 3:57 pm
pc

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகள் மீனா(21). இவருக்கு திருமணமாகி 4 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ள நிலையில், கணவர் இசக்கிப்பாண்டியனை பிரிந்து வாழ்ந்து வந்தார். 

இசக்கிப்பாண்டியன் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன் முத்து என்பவரை மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு பாளையங்கோட்டையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த விடயம் உறவினர்கள் மூலமாக சுடலைமுத்துவிற்கு தெரிய வந்துள்ளது. மேலும், தனது மகள் இரண்டாவது கணவருடன் சுற்றுலா சென்று அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். 

இந்த நிலையில், கோவில் திருவிழாவிற்காக தாதன்குளத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு மீனா வந்துள்ளார். இதனை அறிந்த சுடலைமுத்து தனது மனைவி, மகன் உட்பட 4 பேருடன் அங்கு சென்று மீனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுடலைமுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் மீனாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மீனா உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வர, அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். 

இதுகுறித்து மீனாவின் சித்தி பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சுடலைமுத்து, மாயாண்டி, முப்பிடாதி மற்றும் வீரம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய முருகன் என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர். 

இரண்டாவது திருமணம் செய்த மகளை தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website