மக்களே எச்சரிக்கை!! தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ 4 வகை கொரோனா தொற்று…

May 21, 2022 at 10:52 am
pc

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. இருப்பினும் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் எந்த மாதிரியான கொரோனா பாதிப்பு என்பதை ஆராய மரபனு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்படுகிறது. 

அந்த வகையில் சென்னையை அடுத்த நாவலூரில் தாய், மகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இது எந்த வகையான கொரோனா தொற்று என மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ந்தனர். அதில் தாய்க்கு பிஏ 2 வகை ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும், மகளுக்கு பிஏ 4 வகை ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் தொற்றை பொறுத்தவரை ஏழு வகையாக உருமாறியுள்ளது. இதில் பிஏ 4 வகை என்பது இந்தியாவில் வேறெங்கும் பதிவாகவில்லை. மற்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு இருக்கிறதா என்பதை ஒன்றிய அரசு தான் உறுதி செய்ய வேண்டும். தொற்று பாதிப்பு உறுதியான தாய், மகள் இருவருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாக எந்த பயண வரலாறும் இல்லை. இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு பாதிப்பு இல்லை, நலமுடன் உள்ளனர். தற்போது இருவருக்கும் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளது. 

இந்த வகையான தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும், தொண்டை வலி, சளி, காய்ச்சல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டதாலேயே தாக்கம் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்றன. அவர்களுக்கு பாதிப்பு இல்லை.

எனவே உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏதோ ஒரு இடத்தில் தானே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அலட்சியமாக இருக்ககூடாது என்பதை கொரோனா பரவல் கடந்த இரு ஆண்டுகளாக உலக மக்களுக்கு புரியவைத்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா நான்காவது அலை குறித்த எச்சரிக்கையை ஐஐடி மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்டிருந்தனர். இதனால் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமோ என்ற அச்சம் நிலவி வந்தது. இந்த சூழலில் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் பிஏ 4 வகை பதிவாகியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website