மக்களே எச்சரிக்கை… பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மரணம் – பெற்றோர், சகோதரிக்கு சிகிச்சை!
உணவகத்தில் இருந்து பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.
ஹைதராபாத் லக்டிகாபுல் பகுதியில் உள்ள உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட தந்தையும், மகளும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இச்சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தாலும், தற்போது அது வெளிச்சத்துக்கு வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணத்தை அறிய பிரியாணியின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாதிரி பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சூர்யாபேட்டையில் இருந்து திரும்பி வரும் வழியில் லக்டிகாபுல் என்ற இடத்தில் நிறுத்தி பிரியாணி வாங்கி, வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தினர் நால்வரும் சாப்பிட்டதாக போலீசார் தெரிவித்தனர். தூங்கச் சென்ற குடும்பத்தினர் யாரும் மதியம் வரை எழுந்திருக்கவில்லை.
அக்கம்பக்கத்தினர் கதவைத் தட்டியபோது, குடும்பத்தினர் அனைவரும் மயக்க நிலையில், இருந்ததும், வாலிபரின் தாய் மட்டும் தள்ளாடி வந்து கதவை திறந்து நடந்ததை கூறியுள்ளார்.
உறங்கச் செல்வதற்கு முன் உணவகத்தில் வாங்கிய பிரியாணியை மட்டுமே சாப்பிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.