மணிப்பூர் மக்களுக்காக கொந்தளித்த இளம் தமிழ் நடிகை!
மணிப்பூர் சம்பவத்தால் மனிதநேயம் பலநிலைகளில் தோல்வி அடைந்துள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். மணிப்பூர் கலவரம் பல நாட்களாக நடந்து வரும் நிலையில், குகி இனப் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பிரமுகர், விளையாட்டு பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் நடிகை பிரியா பவானி சங்கர் மணிப்பூர் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘மணிப்பூர் சம்பவத்தால் சமூகம், இனம், மனிதநேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வி அடைந்துள்ளன.
மனிதர்களாகிய நாம் இச்செயலை கண்டிக்க வேண்டும். பல கொடூர சம்பவங்களுக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.
ஊடகங்களை முடக்குவது பிரச்சனையில் உள்ள மக்களுக்கு ஒருபோதும் உதவாது’ என தெரிவித்துள்ளார்.