மத்திய பட்ஜெட் 2023: இளம்பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம்!
சிறுவர்கள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்கு தேசிய மின்னணு (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அவர் பட்ஜெட்டில் இதுபற்றி கூறியிருப்பதாவது:- மின்னணு நூலகம் சிறுவர்கள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்காக தேசிய மின்னணு (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும். பல்வேறு நாடுகள், மொழிகள், ரகங்களை சேர்ந்த தரமான புத்தகங்கள் அவர்களுக்கு கிடைப்பதற்காக இந்த நூலகம் அமைக்கப்படுகிறது.
அதுபோல், பஞ்சாயத்து மற்றும் வார்டு அளவில் நேரடி நூலகங்களை அமைக்க மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும். அங்கு தேசிய மின்னணு நூலகத்தில் இடம்பெற்றுள்ள வசதிகளை பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கவும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிக்கட்டவும் அந்த நேரடி நூலகங்களுக்கு மாநில மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பாடம் சாராத நல்ல புத்தகங்களை அளிக்குமாறு நேஷனல் புக் டிரஸ்ட், சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட் ஆகியவை ஊக்குவிக்கப்படும். கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதும் இத்திட்டத்தில் அடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்கு கல்வியாளர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.