மத போதகரின் பேச்சை கேட்டு பட்டினியாய் இருந்த மக்கள்-21 பேர் பட்டினியால் பலி…

April 23, 2023 at 3:51 pm
pc

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியாக இருந்த மக்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தேவாலயத்தின் உறுப்பினர்கள்

கென்யாவின் கடலோர கிராமமான மலிந்தியிலேயே மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியிருந்த மக்கள் 21 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் மீட்கப்பட்ட சடலங்களில் சிறார்களும் உட்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், குறித்த பகுதியில் மேலும் அதிக சடலங்கள் காணப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஷகோலா வனப்பகுதியில் இருந்து கடந்த வாரம் மிக மோசமான நிலையில் 15 பேர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அருகாமையில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தின் உறுப்பினர்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த தேவாலயத்தின் மத போதகரான பால் மெக்கென்சி என்தெங்கே பொலிசாரிடம் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இதுவரை 58 சவக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுளை நேரில் காண பட்டினி

ஆனால் இதில் தாம் தவறேதும் செய்யவில்லை என போதகர் மெக்கென்சி தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு பிணை அளிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. தமது தேவாலயத்தை 2019ல் மூடிவிட்டதாக மெக்கென்சி குறிப்பிட்டாலும், அது நம்பும்வகையில் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடவுளை நேரில் காண பட்டினியாக இருக்க தமது தேவாலய உறுப்பினர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். மீட்கப்பட்ட சடலங்களில் டி.என்.ஏ சோதனை முன்னெடுக்கப்பட்டு உண்மையில் அவர்கள் பட்டினியால் தான் இறந்தார்களா என்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத நம்பிக்கை மிகுந்த நாடான கென்யாவில் இதுபோன்ற வழக்குகள் இதற்கு முன்னர் பலமுறை, பல கட்டங்களில் நடந்தேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website