மனுஷங்க எப்படின்னு இப்போதான் புரிஞ்சுது.. என் கணவர் இறந்ததுக்கு காரணம் அதுதான்… மனம் திறந்த மீனா!
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டாப் நடிகையாக உயர்ந்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என டாப் நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளா. இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யா சாகர், கடந்த ஜூன் 28 ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
எதிர்பார்க்காத சம்பவம்
கணவர் மறைவுக்கு பிறகு நடிகை மீனா முதல் முறையாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனது கணவர் மரணத்திற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது வித்யா சாகரின் மரணம், திடீரென நிகழ்ந்த ஒன்று என்று கூறியுள்ள நடிகை மீனா, எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அது, நினைத்தற்கு நேர் எதிராக நடந்துவிட்டது என உருக்கமாக கூறியுள்ளார்.
பல நல்ல இதயங்கள்
தன் அம்மா ஒரு துணிச்சலான பெண் அவரால் தான், தனக்கு அந்த கடினமான தருணத்தை தாண்டி வரும் தைரியம் வந்துள்ளது என்று கூறியுள்ள நடிகை மீனா, தன்னை சுற்றி பல நல்ல இதயங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால்தான் தான் இப்போது பேட்டி அளிக்கும் அளவுக்கு வந்திருப்பதாகவும் தெரிவத்துள்ளார். தனது கணவர் மரணத்தில் இருந்து தான் மீண்டு வருவதற்கு காரணம் தனது குடும்பமும் தனது நண்பர்களும்தான் என்றும் நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
உண்மையானவர்களை உணர்ந்தேன்
தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும்போதுதான் யார் இருக்கிறார்கள் என்று தனக்கு புரிந்ததாகவும் தெரிவித்துள்ள மீனா, தனது கணவர் வித்யாசாகர் ரொம்பவே கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும் ஸ்பால் லைட்டில் வருவது அவருக்கு பிடிக்காது என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஃபிரண்ட்ஸ் எல்லாரையும் அவருக்கு தெரியும், அவரையும் தன்னுடைய ஃபிரண்ட்ஸுக்கு தெரியும் என்று கூறியிருக்கும் நடிகை மீனா, தனது கணவர் இறந்த பிறகுதான் உண்மையான நண்பர்கள் உணர்ந்ததாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தனது கணவர் வசித்த பெங்களூர் அப்பார்ட்மெண்ட்டில் நிறைய புறாக்கள் இருந்ததாக கூறியுள்ள நடிகை மீனா, அவற்றின் எச்சத்தால் ஏற்பட்ட தொற்றால்தான் வித்யா சாகருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டது என கூறியுள்ளார். மேலும் ஜனவரியில் தங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சரியாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் வித்யா சாகருக்கு ஏற்கனவே நுரையீரல் தொற்று இருந்ததால் அவருக்கு பாதிப்பு இன்னும் கடினமாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார் நடிகை மீனா.