மனைவி, மகள், மாமியாரை கத்தியால் குத்திய இன்ஜினியர்!
புதுடெல்லியில் மயூர்விஹார் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் சித்தார்த் (37). இவரது மனைவி அதிதி (37). இந்த தம்பதிக்கு 8 வயதில் மகள் உள்ளார். அதிதியின் தாயார் மாயா தேவி (60). சித்தார்த்திற்கும் அவரது மனைவி அதிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
இது தொடர்பாக, சிவில் மற்றும் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கணவன் மனைவி இடையே நேற்று திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சித்தார்த் தனது மனைவி அதிதி, 8 வயது மகள் மற்றும் மாமியார் மாயா தேவி ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான 3 பேரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.
இதில், 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 3 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி, மகள், மாமியாரை கத்தியால் குத்திய இன்ஜினியர் சித்தார்த்தை கைது செய்தனர்.