மன அழுத்தத்தை குறைக்க உதவும் யோகாசனங்களை பற்றிய அற்புத நன்மைகளை பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ….!!
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ, மன கவலையும் மன அழுத்தமும் மனிதனை போட்டு வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த பரப்பரப்பான காலத்தில் உட்காருவதற்கு கூட நேரம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு இரவும் தூங்க முடியாமல் அவதிபடுகிறார்கள்.
ஆனால், யோகா செய்பவர்களுக்கு இந்த கவலை இருக்காது. ஏனென்றால், தினமும் யோகா செய்வதால் மன அழுத்தத்தை நீக்குவது முதல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை பல ஏராளமான அற்புத நன்மைகளை வழங்குகின்றது. குறிப்பாக மனநிலையை சரிசெய்து நன்றாக தூங்க உதவுகிறது. இப்போது மன அழுத்தத்தை குறைக்கும் யோகா என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம்.
உஸ்ட்ராசனம்: முதலில் மண்டியிட்டு பின்னர் பின்பக்கம் வழியாக கைகளால் பாதங்களை தொடவேண்டும். இந்த யோகாவை காலை நேரம் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். இந்த யோகா செய்வதால் இடுப்பு பகுது நெகிழ்வாகிறது, மற்றும் மார்பு பகுதியில் விரிவு ஏற்பட்டு சுவாசத்தை மேம்படுத்துகிறது. மேலும் செரிமானத்தையும் சீராக்குகிறது.
புஜங்காசனம்: முதலில் குப்புறப்படுத்துக் கொண்டு, உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். கால்விரல்கள் தரையில் படுமாறும், குதிகால்கள் வானத்தை பார்த்தபடியும் இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொண்டு, ஆழ்ந்த மூச்சை விடுங்கள். இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னால் வளைக்க வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை விடுங்கள். 15 வினாடி அப்படியே இருக்க வேண்டும். அதன்பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட வேண்டும். இவ்வாறு உடலில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது, அதே நேரத்தில் உடல் மற்றும் மன அழுத்ததையும் குறைக்கிறது.
கருடாசனம்: கால்களையும் கைகளையும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு நிற்க வேண்டும். முன்னாள் இருக்கும் ஏதாவது ஒரு புள்ளியின் மீது கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் இடுப்பு, தோள்பட்டை உள்ள பகுதிகள் மிகுந்த அழுத்தம் பெறும். அப்போது உணர்வுகளை தூண்டிவிடும் புள்ளிகள் சாந்தமடையும். இதனால் கோவம், மன அழுத்தம் குறையும்.
பாலாசனம்: தரையில் கால்களை உட்புறமாக மடக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் தலையை தரையில் படுமாறு, உள்ளங்கைகள் தரையை பார்த்தப்படி முன்புறம் நோக்கி தரையில் வைக்க வேண்டும். அதே நிலையில் கைகளை மட்டும் முன்புறமாக கோர்த்துக் கொள்ள வேண்டும். இந்த யோகா செய்வதால் மார்பு, முதுகு மற்றும் தோள்கள் வலுவாகிறது. அதுமட்டுமல்லாமல், தலைச்சுற்றல் அல்லது சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யவும், முதுகு, இடுப்பு, தொடைகள் மற்றும் கணுக்கால், முதுகு வலியை குறைக்கவும் உதவும். இதனை தினமும் செய்து வந்தால், குறிப்பாக மன அழுத்தம், பதட்டத்தை குறைக்க உதவுகிறது.
வஜ்ராசனம்: கால்களை மடித்து உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்க முழங்கால்களுக்கு இடையில் நான்கு விரல்கள் இடைவெளி விட்டு உங்க குதிகாலில் பிட்டத்தை வைத்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இரு கால்களின் பெருவிரலும் ஒன்றுக்கொன்று தொட வேண்டும். உங்களுடைய கைகளை பின்புறம் கோர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது, மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். உங்களுடைய மொத்த கவனமும் சுவாசிப்பதில் இருக்க வேண்டும். 5 முதல் 10நிமிடங்கள் இதே நிலையில் இருக்க முயற்சிக்க வேண்டும்.