மலையாள படம் “சூக்ஷ்மதர்ஷினி”-நம்ப நஸ்ரியா -பேசில் ஜோசப்…கலக்கிட்டாங்க!!

ப்ரியதர்ஷினி (நஸ்ரியா நசீம்) குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹவுஸ் வொய்ஃப் வாழ்க்கை போர் அடித்துவிட, வேலைக்கு போகலாம் என்ற முயற்சியிலும் இருக்கிறார். ஒரு பக்கம் இண்டர்வ்யூ, வாட்ஸாப் குரூப்பில் புரணி பேசுவது என வாழ்க்கை ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறது.
திடீரென ப்ரியதர்ஷினியின் பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த க்ரேஸ் தனது மகன் இமானுவேலுடன் (பேசில் ஜோசப்) திரும்ப வருகிறார். தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்காக இங்கு வந்திருப்பதாகவும் சுற்றத்தாரிடம் சொல்கிறார் இமானுவேல். ஆரம்பத்தில் எல்லாம் நலமாக சென்றாலும், இமானுவேல் வீட்டில் நடக்கும் ஒரு தீவிபத்திற்குப் பிறகு, ப்ரியதர்ஷினிக்கு ஏதோ சரி இல்லை என்ற உணர்வு எழுகிறது. அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த எனோலா ஹோம்ஸ் விழித்துக் கொள்ள, அதன் பின் நடக்கும் ஸ்பை வேலைகளே கதை. இமானுவேலுக்கு பின் இருக்கும் மர்மம் என்ன? ப்ரியதர்ஷினி என்ன கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.
இப்படத்தைப் பொறுத்தவரை நடிகர்களின் தேர்ந்த நடிப்பே முதல் பலம். நஸ்ரியா இந்த ரோலை மிக இயல்பாக கையாள்கிறார். குடும்பத்தை அழகாக கையாளும் நபராக ஒருபுறம், இன்னொரு பக்கம் பக்கத்துவீட்டு நபரின் மர்மத்தை கண்டுபிடிக்க ஸ்கெட்ச் போடும் மாஸ்டர் மைண்டாக என அசத்துகிறார். இண்டர்வ்யூ முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவரை வாட்ஸ் ஆப் குரூப்பில் எல்லோரும் வாழ்த்த, ”நானும் தான் அதே இண்டவ்யூல முதல் ரவுண்ட் க்ளியர் பண்ணிட்டேன். அது மட்டுமில்ல என்னுடைய கல்யாண நாள் வேற வருது. ரெண்டுக்கு சேர்த்து பார்ட்டி தரேன்” என அட்டென்ஷன் பெற வெகுளியாக நடந்து கொள்வது க்யூட். இமானுவேல் என்னதான் ஜாக்கிரதையாக காய் நகர்த்தினாலும், ஒவ்வொரு முறையும் அவரை சந்தேகக் கண்ணோடே பார்ப்பது, அவ்வீட்டை தனது ரேடாருக்குள்ளேயே வைத்துக் கொள்வது என செம ஷார்ப் நடிப்பும் மிஸ்ஸாகவில்லை.
வெளியில் சிரிப்பும், உள்ளே வன்மமுமாக இந்த முறை வேறு விதத்தில் வந்திருக்கிறார் பேசில் ஜோசப். முதல் காட்சியிலிருந்தே, `இவன் முழியே சரி இல்லையே, கண்டிப்பா எதாவது செஞ்சிருப்பான்’ VIBEஐ தன் உடல் மொழியிலும், நடிப்பிலும் வெளிப்படுத்துகிறார். குச்சியை எடுத்து வந்து மார்க் வைப்பதில் இருந்து, தன் உதவியாளரை கையாள முடியாமல் பொங்குவது என ஹூமர் + டெரரை சரியாக பேலன்ஸ் செய்கிறார். ஆனால், அவர் கதாப்பாத்திரத்திற்கு காட்சிகள் அதிகம் இருப்பது போல, அழுத்தம் அதிகமாக இல்லை என்பது பெரிய மைனஸ்.
இவர்கள் தவிர சின்ன சின்ன பாத்திரங்களில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். அதில் பெரிய அளவில் கவர்வது சுலு கதாப்பாத்திரத்தில் வரும் அகிலா பார்கவன். ப்ரியா உளவு பார்க்கும் போது, வேறு யாரும் வருகிறார்களா என ஸ்பைக்கே, ஸ்பை வேலை பார்ப்பது, ஒரு நபரிடம் வசமாக சிக்கும் போது சமாளிப்பது என வெடித்து சிரிக்க வைக்கிறார். படத்தின் இறுதிப்பகுதியிலேயே எல்லா மர்மங்களும் விலகும் என்பதால், அதுவரை முடிந்தவரை நம்மை கதையோடு ஒன்ற வைப்பதே ஹீமர்தான்.ஷரன் வேலயுதன் ஒளிப்பதிவின் மூலம் சுவாரஸ்யமான கோணங்களைக் கொடுப்பதோடு, அந்த சுற்றத்தின் வடிவமைப்பை நமக்கு பதிய செய்கிறார். அது கதைக்குள் நாம் செல்ல உதவுகிறது. துப்பறியும் கதை என்பதால் ஒரு ஷெர்லக் ஹோம் உணர்வை பின்னணி இசை மூலம் கொடுக்கிறார் Christo Xavier.
படத்தின் பலவீனங்கள் என்றால் படத்தின் ரைட்டிங் தான். முன்பே சொன்னது போல் படத்தின் கடைசி 15 – 20 நிமிடங்களே கதையின் மர்மங்கள் அவிழ்கிறது. அந்த big revealக்கு செல்லும் வரையில் நம்மை என்கேஜ் செய்ய திணறுகிறது படம். எல்லா மர்மங்களையும் இறுதியில் தான் சொல்லுவேன் என இயக்குநர் MC, `ஆனாலும் கடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்டுப்பா’ மோடில் இருப்பதால் கிட்டத்தட்ட 2 மணிநேரம் வெறுமனே காமெடியை மட்டும் வைத்தே படம் நகர்கிறது. கதையை நகர்த்தும் எந்த பெரிய சம்பவமும் நடக்காமலே நகர்வது பெரிய சோர்வைக் கொடுக்கிறது.மொத்தத்தில் ஒரு ஓக்கேயான த்ரில்லர் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது படம். ரைட்டிங்கில் இன்னும் பரபரப்பைக் கூட்டியிருந்தால் ஒரு அட்டகாசமான த்ரில்லராக மாறியிருக்கும்.