மழைக்காலங்களில் செடிகளை பராமரிக்கும் வழிமுறைகள் என்னென்ன …?
நம் அனைவருக்குமே வீட்டைச் சுற்றி அழகழகான பூ செடிகள், காய்கறிகள் செடிகள், மரங்களை வளர்ப்பதற்கு ரொம்ப பிடிக்கும். பொதுவாக, எல்லா செடிகளுக்குமே தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால், அளவுக்கும் மீறி தண்ணீர் ஊற்றினால் அந்த செடியின் வேர் அழுகிவிடும். இப்படி செடிகளை எப்படி வளர்ப்பது என்று கூட தெரிந்து வைத்திருப்போம். ஆனால், பருவநிலை எல்லாநேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது அல்லவா? பெரும்பாலும் செடிகள் எல்லா பருவத்திலும் வளரக்கூடியவையாக இருந்தாலும் ஒரு சில செடிகளை மழைக்காலத்தில் பராமரிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், மழைக்காலத்தில் உங்க செடிகளை எப்படி பராமரிப்பது என்பது பற்றி பார்க்கலாம்.
ஒரு பூத்தொட்டியில் செடி வளர்க்கிறோம் என்றால், தினமும் அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றுவோம். அதுவே, மழைக்காலம் வந்துவிட்டால் அந்த பூத்தொட்டியின் அடிப்பகுதியில் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டு விடுங்கள். இப்படி செய்துவிட்டால் மழை பெய்து எவ்வளவு தண்ணீர் தேங்கி நின்றாலும், அது அந்த ஓட்டை வழியாக வெளியே வந்துவிடும். இதனால், செடியின் வேரும் அழுகாமல் இருக்கும். இது பூத்தொட்டிகளுக்கு மட்டுமல்லாமல், சாக்குப்பைகளில் செடி வளர்ப்பவர்கள் இதை முறையை பின்பற்றலாம்.
நாம் வளர்க்கும் செடிகள் நன்றாக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அமிலத் தன்மையும், காரத் தன்மையும் தான். இதை pH என்று சொல்வதுண்டு. இது தான் செடியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. மழைக்காலத்தில் சில செடிகள் மட்டும் நன்றாக வளர்ந்து செழிப்பாக இருக்கும். இதற்கு காரணம் மழைக்காலத்தில் செடிகளுக்கு அமிலத்தன்மை அதிகமாக கிடைக்கிறது. ஆனால், காரத்தன்மையில் வளரும் செடிகள் அப்படி கிடையாது. எனவே, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது 5 லிட்டர் தண்ணீருக்கு 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து ஊற்ற வேண்டும்.
இப்படி செய்வதால் காரத்தன்மையில் வளரும் செடிகளுக்கு மழை நேரத்திலும் காரத்தன்மை அதிகமாக கிடைக்கும். அதேபோன்று, அமிலத்தன்மை கிடைக்க வேண்டும் என்றால் படிகாரக்கல்லை தூளாக இடித்து, செடி இருக்கும் மண்ணை சுற்றி போட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் மழைக்காலத்திலும் செடிகள் செழிப்பாக வளரும்.