மாணவி ஸ்ரீமதி மரணம்: கொலைக்கான ஆதாரங்கள் இல்லை…போதிய ஆதாரங்கள் இல்லையாம்!!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட நிலையில் அவர்கள் ஜாமீன் கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில்,பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி, தற்கொலை கடிதம், சக மாணவியின் சாட்சி அடிப்படையில் மாணவி வேதியல் பாடத்தில் சிரமப்பட்டுள்ளார் என தெரிகிறது.
இரு ஆசிரியர்களும் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததும் தவறு. மாணவர்களை நன்றாக படிக்கச் சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கமே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல. தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகிறது என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.