மீன்பிடிக்க ஆசைப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: பறிபோன 5 உயிர்!
இந்திய மாநிலம் பீகாரில் மீன் பிடிக்க குளத்தில் இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் பபுவா மாவட்டத்தில் உள்ளது தவபோகர் எனும் கிராமம். இங்குள்ள குளம் ஒன்றுக்கு மீன் பிடிக்க சிறுவர், சிறுமியர் சிலர் சென்றுள்ளனர்.
அவர்களில் ஆசிரியர் சுஷீல் குமார் என்பவரின் மகள்கள் அனு பிரியா (12), அன்ஷு பிரியா (10) மற்றும் மது குமாரி (8) ஆகியோரும் அடங்குவர்.
குளத்தில் இறங்கிய சிறார்களில் ஐந்து பேர் எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறார்கள் சுஷீல் குமாரின் மகள்கள் மற்றும் அவரது உறவினர்களான அமன் குமார், அபூர்வ குமாரி என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் குழந்தைகளை உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் லலித் மோகன் சர்மா கூறுகையில்,
‘அவர்கள் குளத்திற்கு குளிப்பதற்காக மற்றும் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்கள் மூழ்குவது தெரிந்ததும் கிராமத்தினர் அவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டனர் என மருத்துவர்கள் கூறி விட்டனர் என அவர்களுடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்’ என கூறியுள்ளார்.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.