முடிவுக்கு வந்த இந்திய அணியின் ஆசிய கோப்பை கனவு! இறுதிப்போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்
ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.
வாழ்வா சாவா கட்டத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வென்றால் இந்திய அணிக்கு இறுதி போட்டி வாய்ப்பு சிறிதளவு இருக்கும் என நிலை இருந்தது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு வெறும் 129 ரன்களே எடுத்தது. பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் டக் அவுட்டாக, ஃபக்கர் சமான் 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் சொதப்பினர்.
இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இதனால் பாகிஸ்தான் வெற்றி அவ்வளவு தான் எதிர்பார்த்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் ஃபருக்கி வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் நசிம் ஷா 2 இமாலய சிக்சரை விளாசினார்.
இதன் மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.