முடி உதிர்வது முற்றிலும் நின்று கருகரு என்று அடர்த்தியாக வளர இந்த கீரையை சாப்பிட மட்டுமல்ல, தலைக்கு தேய்த்து குளிக்கவும் செய்யலாமே..!!
கருகருவென கூந்தல் நரை இல்லாமல் நல்ல அருமையான நிறத்துடன் வளரவும், அடர்த்தியாக வளரவும் செய்யக்கூடிய ஆற்றல் இந்த ஒரு கீரைக்கு உண்டு. இந்த கீரையை சாப்பிட மட்டும் அல்ல, தலைக்கு தேய்த்து குளித்தாலும் அவ்வளவு பலன்கள் உண்டு. இந்த கீரையை நேரடியாகவும், எண்ணெய் தயாரித்தும் கூந்தல் வளர்ச்சிக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அப்படியான இந்தக் கீரை என்ன கீரை? இதை தலைமுடி வளர்ச்சிக்கு என்ன செய்யணும்? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.
ஏராளமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள இந்த கீரை முடக்கத்தான் கீரை என்று கூறுவார்கள். முடக்கத்தான் கீரை தலை அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து முற்றிலுமாக நம்மை பாதுகாக்கிறது. இந்த கீரையை தோசை, ரசம், குழம்பு என்று விதவிதமாக வைத்து சாப்பிடுவதும் உண்டு. முடக்கு வாதம் எனப்படும் நோயை குணப்படுத்தக்கூடிய தன்மை இதற்கு இருப்பதால் நம் முன்னோர்கள் இதற்கு முடக்கத்தான் என்கிற பெயரை வைத்திருக்கிறார்கள்.
இதில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. வாதம் மட்டும் அல்லாமல் மூட்டு வலியை விரட்டி அடிக்கக்கூடிய சக்தியும் இதற்கு உண்டு. இதனால் முடக்கத்தான் எண்ணெயை மூட்டு வலி இருப்பவர்கள் பயன்படுத்தி பலன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த கீரை எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவ போகிறது?
பொடுகு மற்றும் இளநரையை விரைவாக போக்கக்கூடிய தன்மை முடக்கத்தான் கீரைக்கு உண்டு. நம்முடைய தலை முடியை வேரிலிருந்து வலுவாக்கக்கூடிய சக்தியும் இதற்கு உண்டு. இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் தலையில் இருக்கக்கூடிய அழற்சிகளுக்கு எதிராக போராடும், மேலும் வறண்ட தன்மையிலிருந்து நம்முடைய தலைமுடியை ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள உதவும். இதனால் முடி உதிர்வதை வேகமாக தடுத்து நிற்கும் அற்புதம் மருந்தாக செயல்படுகிறது.
வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை பேஸ்ட் போல மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலை முழுவதும் நன்கு தடவி கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் ஊறிய பின்பு நீங்கள் சாதாரணமாக தலையை ஷாம்பு அல்லது சீயாக்காய் போட்டு அலசிக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மூன்று மாதத்திற்குள் முடி கொட்டுவது அடியோடு நிற்கும். மேலும் புதிய முடியும் அடர்த்தியாக வளர்ந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். நரை விழுவதை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றலும் இதற்கு இருப்பதால் இளநரை இருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தலாம்.
முடக்கத்தான் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும் தலைமுடியை வேகமாக வளர செய்ய முடியும். முடக்கத்தான் கீரையை நல்லெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள். பின்பு குளிர விட்டு இந்த எண்ணெயை நன்கு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயிலிருந்து வாரம் ஒரு தரம் தலைக்கு பத்து நிமிடம் மசாஜ் செய்து, பின்னர் தலைக்கு அலசி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நின்று வேகமாக முடி வளர துவங்கும். வழுக்கை தலையில் கூட முடியை முளைக்க செய்ய கூடிய அற்புதமான முடக்கத்தான் கீரையை இனி சமையலுக்கு மட்டும் அல்லாமல் தலைமுடிக்கும் பயன்படுத்தி தான் பாருங்களேன்!