யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்… சேலத்தில் புகுந்த NIA!அதிர்ச்சி தகவல்

October 7, 2022 at 12:43 pm
pc

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி, கத்தி, முகமுடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து, வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்து வந்துள்ளனர்.

அவர்களிடமிருந்த துப்பாக்கி, கத்தி, முகமுடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இயற்கையை அழிக்கும் விதமாக சேலம் மாவட்டம் ஊத்துமலை அருகில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

அங்கு செல்லும் லாரியில் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது. அதுமட்டுமின்றி இருவரும் புரட்சியாளர்களாக மாறும் நோக்கத்தில் துப்பாக்கி தயாரித்ததாகவும், சாமானியர்களில் இருந்து நீதிபதிகள் வரை தவறுகள் நடப்பதால் இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களையும் காப்பதற்கு இருவரும் ஒன்று சேர்ந்ததாக கூறியுள்ளனர்.

மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோர் வழியில், சாமானிய மக்களை காக்கும் நோக்கத்தில் புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக தெரிவித்தனர். கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கபிலர் என்ற வாலிபர் துப்பாக்கி தயாரிக்க துணையாக இருந்ததாக விசாரணையில் கூறியுள்ளனர்.

இதையடுத்து கபிலரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்கள் எதற்காக துப்பாக்கி தயாரித்தனர். அவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தேசிய புலனாய்வு பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website