ரூ.3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பழக்கடை வியாபாரிக்கு எழுதி வைத்த வாடிக்கையாளர்: ஏன் தெரியுமா?

வாடிக்கையாளர் ஒருவர் தனது ரூ.3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பழ வியாபாரிக்கு எழுதி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழ வியாபாரிக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே நட்பு
பழக்கடைக்காரருக்கு அவரது வாடிக்கையாளர்களில் ஒருவர் ரூ. 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக அளித்துள்ளார். இதில், வாடிக்கையாளருக்கு மூன்று சகோதரிகள் இருந்தாலும் அவர்களின் பெயரில் எழுதி வைக்காமல் பழ வியாபாரியின் பெயரில் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்துள்ளது.
சீனாவில், மா என்ற முதியவர் தனது வீட்டின் அருகே உள்ள லியூ என்ற பழ வியாபாரியை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து நட்பாக பழகி வந்துள்ளார். இதில் மா என்பவரின் மகன் உயிரிழந்ததற்கு பின்னர், அவரை லியூதான் நல்லபடியாக பார்த்துக் கொண்டுள்ளார்.
முதியவருக்கு உறவினர்களும், சொந்தக்காரர்களும்இருந்த போதிலும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. முதியவர் இறக்கும் வரையிலும் லியூ தான் கவனித்து வந்துள்ளார்.
ரூ.3.80 கோடி மதிப்புள்ள வீடு
முதியவர் மா உயிரிழந்ததையடுத்து, அவர் எழுதி வைத்திருந்த உயிலை பார்த்த போது தான் உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதாவது மா, தனக்கு சொந்தமான ரூ. 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை லியூ பெயரில் எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து, பழ வியாபாரிக்கு எதிராக ஷாங்காய் நீதிமன்றத்தில் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது, மன நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதியவரை ஏமாற்றி பழக்கடைக்காரர் சொத்தை அபகரித்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இருந்தாலும், 2020 -ம் ஆண்டே முதியவர் தனது வீட்டை எழுதி தந்து விட்டதாக லியூ தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.
பின்னர், வழக்கை விசாரித்த நீதிமன்றம், பழக்கடை வியாபாரி பக்கமே நியாயம் இருப்பதாக கூறி உறவினர்களின் வழக்கை தள்ளுபடி செய்தனர்.