வரதட்சணை கொடுமை… காதல் கணவரின் வீட்டு முன்பு பெண் தர்ணா!

April 1, 2022 at 3:01 pm
pc

ரூ.15 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கூறி சேலத்தில் காதல் கணவரின் வீட்டு முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்
சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பேபி சுந்தரம்பாள் (வயது 30). இவருடைய கணவர் ராம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் பேபி சுந்தரம்பாள் தனது 10 வயது மகனுடன், தாயார் வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (28) என்பவர் பேபியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் அதற்கு பேபியின் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். அதேநேரத்தில் வெங்கடாசலத்தின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெங்கடாசலம் தனது குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் பேபியை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவரும் எருமாபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.


வரதட்சணை கொடுமை
இந்தநிலையில், வெங்கடாசலம் தனது மனைவி பேபியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது, தனக்கு கடன் அதிகமாக உள்ளது. இதனால் ரூ.15 லட்சம் தேவை. எனவே, உனது தாயாரின் வீட்டை விற்பனை செய்து பணத்தை தருமாறு கணவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பணம் தரவில்லை என்றால் உன்னுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று கூறிவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடாசலம் தனது பெற்றோருடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க, வெங்கடாசலத்திற்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் பேபிக்கு தெரியவந்ததால் அவர் இது தொடர்பாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

கணவர் வீட்டு முன்பு தர்ணா
இந்தநிலையில், நேற்று காலை பேபி சுந்தரம்பாள் தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வெங்கடாசலத்தின் குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே துரத்திவிட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த பேபி தனது கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் நீதி வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த அட்டை ஒன்றை வைத்திருந்தார். தனது கணவருடன் சேர்த்து வையுங்கள் என்று கண்ணீர் மல்க அக்கம் பக்கத்தினரிடம் பேபி கூறியுள்ளார்.


இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், பேபி மற்றும் அவரது கணவர் வெங்கடாசலம் ஆகிய இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு பற்றி தகவல் அறிந்த பெண் கணவரின் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website