வரதட்சனை நகைகளை அடகு வைத்த கணவன் -தற்கொலை செய்த கர்ப்பிணி பெண்

September 15, 2022 at 2:38 pm
pc

சென்னை போரூர் மதனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (30) . இவர் போரூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசித்ரா தேவி (25) எம்.காம் பட்டதாரி. இந்நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், சீர்வரிசையாக பெண் வீட்டார் 25 பவுன் நகை மற்றும் கார் உள்ளிட்டவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்வரிசையாக கொடுத்த நகையிலிருந்து 10 பவுன் நகையை மனைவி சசித்ரா தேவிக்கு தெரியாமல் சேதுபதி எடுத்து அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து பீரோவில் வைத்திருந்த நகை மாயமானது குறித்து சசித்ராதேவி கேட்டபோது, சேதுபதி நகையை அடகுவைத்ததாக கூறியதையடுத்து, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக இருவீட்டாரும் சேர்ந்து தம்பதியை சமரசம் செய்து வைத்தனர். தற்போது 7 மாத கர்ப்பிணியாக சசித்ராதேவி உள்ள நிலையில், வளைகாப்பு நடைபெறுவதற்கு முன்னதாக 10 பவுன் நகையை மீட்டு விடுகிறேன் என்று சேதுபதி உறுதியளித்துள்ளார். 

இதையடுத்து நேற்று முன்தினம் காலை சேதுபதி, சசித்ரா தேவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி சிரஞ்சீவி நகர் முதல் குறுக்குத்தெருவில் வசிக்கும் மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர், தாய் வீட்டுக்கு வந்த சசித்ரா தேவி தனியறையில் உறங்கினார். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் அவரது தாயார் கமலா எழுந்து பார்த்தபோது, சசித்ராதேவி மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website